திருமணஞ்சேரி
சிவம் என்றால் மங்களம் என்று பொருள், மங்களமான இறைவன் மாங்கல்ய வரம் அருளும் இடம் தான் திருமணஞ்சேரி.
இத்தலத்தின் பெயரிலே இறைவனை வழிபடுவதால் ஏற்படும் பலன் குறிப்பிடப்படுகிறது. திருமணஞ்சேரியில், மணமாகாதவர்கள் 'மண வாழ்வு' வேண்டி இங்கு வந்து வழிபட்டு திருமண வாழ்வு பெறும் அற்புதத்தை காண முடிகிறது."மணமாலை அணியும் நாள் எந்நாளோ?" என்று ஏங்கித் தவிக்கும் இள உள்ளங்களின் மன ஏக்கத்தை தவிர்க்கும் பொருட்டு அம்மையும் அப்பனும் எழுந்து அருள்புரியும் தலம் 'மணமாலை' வேண்டி வழிபடுவதே இத்தலத்தின் மிகப் பெரிய சிறப்பாகும்.
தல இருப்பிடம் :
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ தூரத்திலும், குத்தாலத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
இறைவன் திருபெயர் : உத்வாக நாதர் (அருள் வண்ணநாதர்)
இறைவி திருபெயர்: கோகிலாம்பாள், (யாழினும் மென்மொழியாள்)
தல விருட்சம் : திருஊமத்தை, மருத்துவ குணம் நிரம்பிய வன்னி, கொன்றை, கருஊமத்தை.
தல தீர்த்தம்: இறைவன் திருமணத்தை கான இங்கு ஏழு கடலும் வந்து தங்கியதாக கூறுப்படுகிறது.
தல வரலாறு :
கைலாயத்தில் உமாபார்வதிக்கும் மகேஸ்வரருக்கும் சிறு ஊடல் ஆரம்பித்து பிணக்காகியது, அச்சமயத்தில் மகேஸ்வரன் பார்வதி தேவியாருக்கு பசுவாக பிறக்குமாறு சாபமிட சாப விமோசனமாக ஆடுதுறையில் உன்னை இடப்பாகத்தில் சேர்த்துக் கொள்வேன் என்று அருளினார்.
பிறகு திருத்துருத்தி எனும் குத்தாலத்தில் பரதமகரிஷி உன்னை மகளாக அடைய தவம் செய்து கொண்டு இருக்கிறாராம். அவரிடம் அவர் செய்யும் யாகத்தில் பெண் குழந்தையாக அவதரித்து வளர்ந்து வரும்போது என்னால் அனைவரும் மகிழ திருமணம் செய்யப் பெற்று எம்முடைய இடப்பாகத்தை அடைவாய் என அருளினார். அவ்வாறே அம்பாளும் பசு உரு ஏற்றதாகவும், திருமால் பசு மேய்ப்பவராகி சகோதரியான அம்பாளை பராமரித்ததாகவும் வரலாறு கூறுகிறது. அம்பாள் திருத்துருத்தி எனும் குத்தாலத்தில் பரத மகரிஷி செய்த யாக குண்டத்தில் மகளாகத் தோன்றியருளினார். தேவி நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து, எம்பெருமானை மணம் செய்வதற்காக தவம் புரியலானார். அவர் தவத்திற்கு உவந்து அவர்முன் தோன்றி தேவியாரின் திருகரத்தைப் பற்றினார். அப்போது இறைவியும், "ஐயனே! யான் தங்களுக்கே உரியவள் ஆயினும் என் பிரார்த்தனைப்படி என் தாய் தந்தையர் அறிய என்னை மணம் செய்து கொள்ள வேண்டும்” என இறைவனிடம் தேவி கூற, இறைவனும் அவ்வாறே என்று அருளினார். உமையம்மையின் வேண்டுகோளை ஏற்று, சிவபெருமான், அம்மையாரிடம் விதிமுறைப்படி மணந்து கொள்வதாகச் சொல்லி இத்தலத்தில் அவ்வாறே மணம் செய்து கொண்டார். எனவே அவர் சொன்னாவாறறிவார் எனும் திருநாமத்தையும் பெற்றார். திருமணஞ்சேரியை சென்று வழிபடுவதன் முன் தேவார ஆசிரியர் மூவராலும் பாடல்பெற்ற திருத்துருத்தி எனும் குத்தாலத்தை தரிசித்தல் சிறப்பு.